பதிவு செய்த நாள்
05
டிச
2024
12:12
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச. 13ல் மலைமேல் மஹா தீபம் ஏற்றப்படுகிறது.
கொடியேற்றம்: இன்று காலை சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். காலை 8:40 மணிக்கு கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். பட்டு துணி, மா இலை, தர்ப்பை புல் வைத்து கொடி கம்பத்தில் கட்டப்பட்டு அடிப்பாகத்தில் பால் உள்பட பல்வகை திரவிய அபிஷேங்கள் நடந்தது. திருவிழா நம்பியார் சிவகுரு சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.
சுவாமி வீதி உலா: நாளை முதல் டிச. 13வரை தினம் காலை சிம்மாசனம், தங்கச்சப்பரம், சப்பரம், விடையாத்தி சப்பரத்திலும், இரவில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்க குதிரை, காமதேனு வாகனங்களில் தினம் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர்.
சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை: திருவிழா 6ம் நாளான டிச. 10ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, டிச.11 காலையில் கங்காளநாதர் சுவாமி புறப்பாடு, மாலையில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்பாளும், காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். மஹா தீபம்: டிச.12ல் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம், டிச. 13 காலையில் தேரோட்டம், மாலையில் மலைமேல் மஹாதீபம், இரவு சொக்கப்பனை தீபக் காட்சி, டிச. 14ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்மை தேவன், சண்முகசுந்தரம், ராமையா, தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி கலந்து கொண்டனர்.