பதிவு செய்த நாள்
06
டிச
2024
10:12
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாவட்டத்தில், ‘பெஞ்சல்’ புயலால் டிச., 1, 2ம் தேதி கனமழை பெய்ததில், அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டது. வ.உ.சி., நகரில் ஏற்பட்டதில், ஏழு பேர் பலியாகினர். மலையில் மண்ணின் தரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. அவர்கள் ஆய்வு நடத்தியபோது, மேலும் மழை பெய்தால், மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். டிச., 13ல், 2668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபத்தை காண, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் எவ்வித கட்டுப்பாடின்றி ஏராளமானோர் அனுமதிக்கப் பட்டனர். பக்தர்கள் பாதுகாப்பு கருதி கடந்த ஐந்தாண்டுகளாக 2500 பேர் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதித்து வருகிறது. வனத்துறையினரும், மண் ஈரத்தன்மையுடன் உள்ளதால், மலை மீது பக்தர்கள் ஏற அனுமதிப்பில் தயக்கம் காட்டியுள்ளனர். போலீசாரும், பாதுகாப்பு தருவதில் சிரமம் உள்ளதாக கருதுகின்றனர். இதனால், இந்தாண்டு மலை மீது ஏற, மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வாய்ப்பில்லை. மலைஉச்சியில் மஹா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்களில், 50 பேரை மட்டும் அனுமதிக்க வாய்ப்புள்ளது.