சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி கோவிலில் திருமங்கையாழ்வார் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2024 05:12
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். நரசிம்ம சுவாமி யோக நிலையில் இங்கு அருள்பாலித்து வருகிறார். யோக நிலையில் உள்ள சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களின் வேண்டுதலை, அனுமன் கேட்டு நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். தவ நிலையில் உள்ள யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனால், கார்த்திகை மாதத்தில் வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. கடந்த 17 ம் தேதி துவங்கிய கார்த்திகை உற்சவத்தில் இன்று வெள்ளிக்கிழமையை ஒட்டி சிறப்பு உற்சவம் நடைபெற்றது. மேலும், கடந்த 4ம் தேதி முதல், உற்சவர் பக்தோசித பெருமாள் கோவிலில் திருமங்கை ஆழ்வார் உற்சவமும் நடந்து வருகிறது. இதில், உற்சவர் திருமங்கை ஆழ்வார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.