திற்பரப்பு மகாதேவர் மூலவர் சன்னதி புனரமைக்கும் பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2012 11:12
திற்பரப்பு : திற்பரப்பு மகாதேவர் கோயில் மூலவர் சன்னதி மேற்கூரை சுமார் 35 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி துவங்கியது.குமரி மாவட்டத்தின் முக்கிய சன்னதிகளில் ஒன்றும், பன்னிரு சிவாலயங்களில் மூன்றாவது கோயிலுமான திற்பரப்பு மகாதேவர் கோயிலில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. திற்பரப்பு அருவியின் அருகே கோயில் அமைந்துள்ளதால் வெளிமாநில பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் மதிப்பீடு செய்து பணிகள் நடந்துவருகிறது. தற்போதைய ஆணையர் தனபால் சுசீந்திரம் இணை ஆணையாளராக இருக்கும் போது கோயில் திருப்பணிகளை பார்வையிட வந்தார். அப்போது மூலவர் சன்னதி மேற்கூரை மிகவும் பழுடைந்துள்ளதாகவும், திருப்பணி மேற்கொண்டு மேல்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள செம்பு தகடுகள் புதிதாக அமைக்க வேண்டுமெனவும் கோயில் பாதுகாப்பு குழுவினர் கோரிக்கை வைத்தனர். கோயில் மேற்கூரையின் நிலையை கருத்தில் கொண்டு புனரமைப்பு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக அதிகாரி உறுதியளித்தார். தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு மூலவர் சன்னதி மேற்கூரை புனரமைப்பு பணி நேற்று துவங்கியது. கோயில் ஸ்ரீகாரியம்(பொறுப்பு) ஈஸ்வரபிரசாத், இன்ஜினியர் ஐயப்பன், கோயில் பாதுகாப்புக்குழு தலைவர் அனில்குமார், கவுன்சிலர் கிருஷ்ணவேணி முன்னிலையிலை வகித்தனர். தச்சன் திருச்சூர் ஹரிகுமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒப்பந்தக்காரர் சுந்தரேசன், பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் சண்முகம், கிருஷ்ணன்குட்டி, ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். மேற்கூரை புனரமைப்பு பணிக்காக துறை மூலம் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக மேற்கொள்ள சுமார் 35 லட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது. 25 லட்சம் ரூபாய் உபயதாரர்கள் மூலம் திரட்டப்படும் என கோயில் பாதுகாப்புக்குழு தலைவர் அனில்குமார் கூறினார். பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் விருப்பம் மூன்று மாதங்களில் திருப்பணி முடித்து கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் துவங்கியது. மூன்று ஆண்டுகள் கடந்தும் திட்டமிட்ட பணிகள் முடியவில்லை. பக்தர்கள் வேண்டுகோள்படி மூலவர் சன்னதி மேற்கூரை புனரமைக்க அனுமதி வழங்கி, தேவனிடம் அனுமதி பெற்று, தற்காலிக மேற்கூரை அமைத்து மாதங்கள் பல கடந்த பின் தற்போது பணி துவங்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடராமல் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்து கும்பாபிஷேகம் மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.