பதிவு செய்த நாள்
01
டிச
2012
12:12
பாண்டிய நாட்டிற்கு சொந்தமான 14 திருத்தலங்களில் ஒன்று, சிவகங்கை, திருக்கானப்பேர். இப்பெயர் காலப் போக்கில் மருவி, காளையார்கோவில் என்றானது. இங்கு, ஒரே கோவிலின் கீழ், இரண்டு ராஜகோபுரங்கள் எழுப்பி இருப்பது, வரலாற்று சிறப்பு. பாண்டிய நாட்டிற்கு சொந்தமான 14 திருத்தலங்களில், முக்கிய தீர்த்தத் தலம் இது. காளீஸ்வரர், சோமேஸ்வரர் சுவாமிகளுக்கு இங்கு தனித்தனி சன்னதி உண்டு. இதற்காக, ஏழாம் நூற்றாண்டில், மாறவர்மன் சுந்தரபாண்டியனால், காளீஸ்வரருக்கு, முதல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. அதன் உயரம் 90 அடி; அகலம் 57 அடி 8 அங்குலம். ஐந்து நிலைகள் உள்ளன. இரண்டாவது ராஜ கோபுரம், மருது சகோதரர்களால், 18ம் நூற்றாண்டில், சோமேஸ்வரருக்கு கட்டப்பட்டது. அதன் உயரம் 155.5 அடி; அகலம் 93 அடி; ஒன்பது நிலைகளை கொண்டது.
மற்ற கோபுரங்களில், பல அவதாரங்களின் சுதைகள் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்குள்ள ராஜகோபுரங்களில், அவை இல்லை. முற்றிலும் மண்டபம் போன்ற அமைப்பில் கற்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுர உச்சியில் நின்று பார்த்தால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு ரத வீதிகளும் அழகாய் தெரியுமாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர். இங்கு வரும் பக்தர்கள், இரண்டு ராஜகோபுரங்களை தரிசிப்பதால், இரட்டை கோடி புண்ணியம் அடைவதாக, ஐதீகம். இக்கோவிலில் பாலாலய பணிகள் நடப்பதால், ராஜகோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளில், காளையார்கோவில் இரட்டை கோபுரங்களும் அடங்கும். பார்த்து ரசிக்க ஆசையிருந்தால், சிவகங்கையில்இருந்து 18 கி.மீ., தொலைவில் பயணித்தால், காளையார்கோவிலை காணலாம். மதுரை-தொண்டி செல்லும் அனைத்து பஸ்களும், காளையார் கோவில் வழியாகவே செல்லும்.