பதிவு செய்த நாள்
03
டிச
2012
10:12
நாகர்கோவில்: நாகர்கோவில் கார்மல் மேல்நிலை பள்ளியில் தேவசகாயம்பிள்ளை முக்திப்பேறு பெற்றவர் அறிவிப்பு விழா நடந்தது. இந்தியாவில் நடக்கும் முதல் மறைசாட்சி அறிவிப்பு வெளியிடும் விழா நாகர்கோவிலில் நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்த போப்பாண்டவரின் பிரதிநிதியும், புனிதர் பட்ட பேராலயத்தலைவருமானகர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை முக்திபேறு பெற்றவராக அறிவித்தார். விழாவையொட்டி நாகர்கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழா நடந்த கார்மல் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 1 லட்சம் பேர் அமரக்கூடிய கூடாராம் அமைக்கப்பட்டது. மேடையில் நடக்கும் நிகழ்வுகளை அனைவரும் காணும் வகையில் ஆங்காங்கே டி.வி.கள் பொருத்தப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள 3 மைதானங்களும் நிரம்பியதால் ஏராளமான பக்தர்கள் ரோடுகளில் நின்று திருப்பலியில் கலந்துகொண்டனர். உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவு தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. முக்கியஸ்தர்கள் வரும் ராஜாக்கமங்கலம் ரோட்டில் அலங்கார வளைவுகள், மறைசாட்சி தேவசகாயம்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.
குமரி மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவுபடி, டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உள்ளூர் போலீசாருடன் வெளிமாவட்ட அதிரடிப்படையினரும், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவையொட்டி நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் ரோட்டில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பொதுப்பணித்துறை ரோடு ஒற்றை வழிப்பாதையாக கடைபிடிக்கப்பட்டது. விழாவில் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், ராஜேந்திரபிரசாத், ஹெலன்டேவிட்சன் எம்.பி., டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. லீமாறோஸ் உட்பட ஏராளமான மக்கள் பிரதிநிதிகள், கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
திருத்தூது மடல் வாசித்தல் பெருவிழா: விழாவில் தல பிஷப் என்ற அடிப்படையில் கோட்டாறு மறைமாவட்ட பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் வரவேற்றார். வக்கீல் லீனஸ்ராஜ் வழிபாட்டு நிகழ்வுகளை பற்றிய பொது முன்னுரை வாசித்தார். அதைத்தொடர்ந்து வருகை பாடல் பாடும்போது, வருகை பவனியுடன் கர்தினால்கள் அழைத்து வரப்பட்டனர். பவனியில் வானதூதர்கள் வேடமணிந்த சிறுமிகள் முன்னால் வர தொடர்ந்து அருள்தந்தையர், குருகுல முதல்வர்கள், பிஷப்புகள் வந்தனர். தொடர்ந்து கர்தினால்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி பிஷப் பீட்டர் ரெமிஜியஸ் பூரண கும்ப ஆராட்டு எடுத்து வரவேற்றார். தொடர்ந்து முக்திபேறு நிலை சடங்கை இந்திய லத்தீன் பிஷப் பேரவை தலைவர் தெலஸ்போர் தோப்பே ஆங்கிலத்தில் நிறைவேற்றினார். அதை பிஷப் அம்புறோஸ் தமிழில் வாசித்தார். அதன்பின் மும்பை மறைமாநில பேராயர் ஆஸ்வால்டு கிராசியாஸ் மறைசாட்சி தேவசகாயம்பிள்ளையின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆங்கிலத்தில் பேசினார். அதை தமிழக ஆயர் மன்ற தலைவர் சின்னப்பா தமிழில் வாசித்தார். அவர் கூறியதாவது: நீலகண்டபிள்ளை நட்டாலம் ஊரில் 1712ம் ஆண்டு பிறந்தார். நன்கு கற்றுதேர்ந்தார். முதலில் போர் வீரனாகவும், பின்னர் கோயில் பணியாளராகவும், இறுதியில் அரச கருவூலத்தில் பணியாற்றும் அரசவை அலுவலராகவும் வேலை செய்தார். அவரது நாயர் குலத்தை சேர்ந்த பார்கவியம்மாள் என்பவரை திருமணம் செய்தார். 1741ல் நடந்த குளச்சல் போரில் கைது செய்யப்பட்ட டச்சு ராணுவ தளபதி பெனடிக்ட் டிலனாய் சந்திப்புக்கு பின் நீலகண்டபிள்ளை கிறிஸ்தவராக மாறினார். 1745ல் வடக்கன்குளத்தில் அருள்தந்தை ஜான்பாப்டிஸ்ட் புத்தாரியிடம் திருமுழுக்கு பெற்றார். அதன்பின் லாசர் என்ற பொருள்கொண்ட தேவசகாயம்பிள்ளை என பெயர் மாற்றம் செய்தார். கிறிஸ்தவ சமூகத்தில் சேர்ந்த அவர் மற்றவர்களும் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தினார். இவ்வாறு முதலில் கிறிஸ்தவத்துக்கு மாறியவர் அவரது மனைவி. அவர் ஞானப்பூ என்ற பெயரை பெற்றார். புதிய விசுவாசம் காரணமாக ஜாதி வேறுபாடுகளை களைந்தார். பிறப்பால் தாழ்ந்தவர்கள் என கருதப்பட்டவர்களுடன் உணவருந்தினார். இதை கண்ட உயர்ஜாதியினர் தேவசகாயம்பிள்ளை ஒரு துரோகி எனடும், சமய செயல்பாடுகளை இகழ்பவர், தெய்வங்களையும், அரச அரியணையையும் பழப்பவர் என குற்றம்சாட்டினர். இதனால் 1749ல் கைது செய்யப்பட்டார். பல்வேறு சித்திரவதைக்குள்ளானார். புலியூர்குறிச்சியில் தாகத்தால் தவித்தபோது பாறையில் இருந்து தண்ணீர் கிடைத்தது. பின் ஆரல்வாய்மொழி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு 1752 ஜனவரி 14ம் தேதி காற்றாடி மலையில் சுட்டுகொல்லப்பட்டார். இவ்வாறு அவர் பேசினார்.
திருத்தூது திருமுகம் வாசித்தல்: மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை முக்திபேறு பெற்றவராக போப்பாண்டவர் அறிவித்த திருத்தூது ஆணையை போப்பாண்டவரின் பிரதிநிதி கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ லத்தீன் மொழியில் வாசித்தார். அதை பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தமிழில் வாசித்தார். அதில், கோட்டாறு பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ், பிஷப் நிலையில் உள்ள பல சகோதரர்கள் மற்றும் பற்பல கிறிஸ்தவ விசுவாசிகளுடைய விருப்பத்தை ஏற்றுக்கொண்டும், புனிதர் நிலைக்கான பேராயத்தின் பார்வையை கருத்தில் கொண்டும், நாம் நம் திருத்தூது அதிகாரத்னால், ரத்தம் சிந்தும் அளவுக்கு துணிவுடன் விசுவாசத்திற்கு சான்று பகர்ந்த பொதுநிலையினர் வணக்கத்துக்குரிய இறை ஊழியர் தேவசகாயம்பிள்ளை முக்திப்பேறுபெற்றவர் என்று இன்றிலிருந்து அறிக்கையிடப்படவும், அவரது திருவிழா திருசபை சட்டத்தின் ஒழுங்கு முறைகளுக்கேற்ப குறிப்பிட்ட இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படவும் அனுமதிக்கிறோம். இவ்வாறு வாசிக்கப்பட்டது. அதன்பின் லத்தீன் மொழியில் பாடல் பாடப்பட்டது. அப்போது முத்துக்குடை, மெழுகுவர்த்தி ஊர்வலத்துடன் முக்திபெறு பெற்ற தேவசகாயம்பிள்ளையின் சுரூபம், பெரிய படம், திருப்பண்டங்கள் மேடைக்கு கொண்டு வரப்பட்டது. கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ புனித பண்டங்களுக்கும், சுரூபத்துக்கும் தூபம் காட்டினார். தொடர்ந்து தேவசகாயம்பிள்ளையை புகழ்ந்து பாடும் பாடல் பாடப்பட்டது. அப்போது கர்தினால் திருத்தூது மடலை பிஷப்பிடம் வழங்கினார்.
பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் நன்றியறிவிப்பு: பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் கர்தினால்கள், பிஷப்புகளுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கோட்டாறு மறைமாவட்டம் இந்யாவிலேயே பெருமை பெற்றுள்ளது. நம் மாவட்டத்தில் பிறந்த தேவசகாயம்பிள்ளை முக்திப்பேறு பெற்றவர் என்ற உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, வழிபாட்டுக்கு தகுதியுள்ளவர் என்று பிரகடனம் செய்து அவரிடம் பிரார்த்தனை செய்த கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோவை அனுப்பியதற்காகவும், பிரகடனம் செய்ததற்காகவும் நன்றி தெரிவிக்கிறோம். நமக்குபெருமை சேர்த்த பிஷப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் விழாவில் பங்கு பெற்ற கர்தினால்கள், பிஷப்புகள் என அனைவருக்கும் நன்றிதெரிவிக்கிறோம். இவ்வாறு பிஷப் பேசியதும் அங்கு கூடியிருந்த அனைத்து இறைமக்களும் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.
கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ மறையுறை: கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ ஆங்கிலத்தில் மறையுரை வழங்கினார். அதை சிவகங்கை பிஷப் சூசை மாணிக்கம் தமிழில் மொழி பெயர்த்தார். மறையுரையில் அவர் கூறியதாவது: இந்தியாவில் முதல் மறைசாட்சி என்பதால் இந்தியாவுக்கு பெருமை. அதுவும் தமிழ்நாட்டில் என்பதால் நமக்கு பெருமை. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் குமரி மக்களுக்கு பெருமை. பொதுநிலையினர் என்பதால் பொதுநிலையில் உள்ள அனைவருக்கும் பெருமை. திருமணம் ஆனவர் என்பதால் திருமணமான இல்லாதர் அனைவருக்கும் பெருமை. ரோமில் மட்டுமே நடக்கும் வழக்கம் உடைய இந்த விழா தற்போது இங்கு நடக்க வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அனைத்து பொதுநிலையினரும், இல்லத்தார்களும் புனிதர் ஆகலாம் என்ற அத்தாட்சி இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. காலம் கடந்து வந்தாலும் நம் இதயத்தை சந்தோஷப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மன்றாட்டுகள், சுரூபங்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஜாதிய பாகுபாடுகள் நிறைந்த அந்த காலகட்டத்தில் நாயர் என்ற உயர்குடியில் பிறந்த அவர் தாழ்த்தப்பட்ட மக்களோடு வாழ்ந்து ஜாதிய வேறுபாடுகளை களைய முழுமூச்சாக எதிர்ப்புகளை எதிர்கொண்டார். உயர்குடியில் இருந்தவர்களின் எதிர்ப்பை சந்தித்தார். அதுவே அவரது மரணத்துக்கும் காரணமாகிவிட்டது. இப்போதும் ஜாதிய கொடுமைகளை ஒழித்து சாதாரண சமுதாயத்தையும், மதசார்பில்லாமல் வாழ்வோம் என தேவசகாயம்பிள்ளை பெயரில் உறுதி ஏற்போம். அவர் 40 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் 7 ஆண்டுகள் கிறிஸ்தவராக வாழ்ந்தார். அதில் 3 ஆண்டுகள் தொடர் துன்புறுத்தலை எதிர்கொண்டார். இதனால் 3 நூற்றாண்டுகளை கடந்தும் அவர் மணம் வீசிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நற்கருணை வழிபாடு, பாடல், தேவசகாயம்பிள்ளையிடம் ஜெபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.