பதிவு செய்த நாள்
04
பிப்
2025
04:02
மேட்டுப்பாளையம்; ரத சப்தமியை முன்னிட்டு, தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் தங்கத்தேரோட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில், தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ரத சப்தமியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் சுப்ரபாதத்துடன் துவங்கியது. தொடர்ந்து மலையப்பசாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. பின் மலையப்பசாமி சேஷ வாகனம், அன்னப்பட்சி வாகனம், அனுமந்த வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ரதசப்தமியின் முக்கிய நிகழ்வான தங்கத்தேரோட்டம் மதியம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பின், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தங்கத்தேரில் எழுந்தருளிய மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க, தங்கத்தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோவிலின் நான்கு மாட வீதிகளின் வழியாக தங்கத்தேரானது வலம் வந்து இறுதியாக நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாட்டினை அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.