பதிவு செய்த நாள்
04
பிப்
2025
04:02
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்ரவரி 26 ல் துவங்குவதை முன்னிட்டு கொடிமரம் நடும் விழா கோலாகலமாக நடந்தது.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. தீபாரதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதும் இல்லை. குடங்களில் நிறைந்து காணப்படும் நெய்யினை எறும்புகள் நெருங்குவதில்லை. பகலிரவு அணையாத நெய்விளக்கு எரிகின்றது. தினமும் மாலை உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க சாயரட்சை பூஜை நடக்கிறது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குலதெய்வமாக நினைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும், மாசி மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கொடிமரம் நடுவிழா: பிப்., 26 முதல் மார்ச் 2 வரை ஐந்து நாட்களும், இதனை தொடர்ந்து மார்ச் 5 வரை மறுபள்ளயம் நாட்களை கணக்கில் கொண்டு 8 நாட்கள் திருவிழா நடக்கிறது. பக்தர்கள் தொட்டு வணங்கி கொடுத்து 55 அடி உயரம் மூங்கில் கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தி நடப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் வேலுச்சாமி, பரம்பரை அறங்காவலர்கள் தனராஜ் பாண்டியன், கனகராஜ் பாண்டியன் செய்து வருகின்றனர்.