பதிவு செய்த நாள்
05
பிப்
2025
10:02
ஆரணி; ஆரணி அடுத்த, சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருமண பாக்கியம், குழந்தைபேறு உள்ளிட்டவைகளுக்கு தொடர்ந்து, ஆறு வாரங்கள் கோவிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. செவ்வாய்க்கிழமைகளில், தங்களது வேண்டுதல்களுடன், பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். நேற்றும், பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. புதிய வீடு, திருமண தடை நீங்க, அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என, பல்வேறு வேண்டுதல்களுடன், கோவிலின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தடியில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என, அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததது. கோவிலுக்கு வெளியே, உள்ளே என, பக்தர்கள் நீண்ட வரிசையில், இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து முருக பெருமானை வணங்கி சென்றனர்.