பதிவு செய்த நாள்
05
பிப்
2025
02:02
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, தைப்பூச தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு தைப்பூச திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி நடந்தது. இன்று அதிகாலை, 4:30 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு புண்யாக வாசனம், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், இறை அனுமதி பெறுதல் உள்ளிட்டவைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சேவல் உருவம் பொறிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட, 25 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்டிருந்த கொடி, கோவில் கொடிமரத்தில் கொடிமங்கள நாண்களால் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது பக்தர்கள் அரோகரா என்ற கோஷம் எழுப்பினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வரும், 10ம் தேதி திருக்கல்யாணம், 11ம் தேதி தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது.