பதிவு செய்த நாள்
06
பிப்
2025
04:02
திருப்பூர்; ‘அரோகரா’ கோஷத் துடன் பக்தர்கள் புடைசூழ சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம், நேற்று கோலாகலமாக நடந்தது.
காங்கயம் அடுத்த சிவன்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த 2ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர் திருவிழாவுடன் துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு வீரகாளியம்மன், மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின், சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும், விநாயகர் வழிபாடும் நடந்தது.
முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மயில் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. சுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மலையை வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணை முட்டியது. மதியம் சுவாமிமலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு காலசாந்தி கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்கள் சார்பில், மண்டப கட்டளை நடந்தது. தேரோட்டம், வரும் 11ம் தேதி நடக்கிறது. அன்று காலை, சுவாமி ரதத்துக்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை தேரோட்டம் துவங்குகிறது. 12, 13ம் தேதிகளில் மலையை வலம் வந்து நிலை அடைகிறது. 16ம் தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 17ம் தேதி மஹா தரிசனம், 20ம் தேதி கொடியிறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
அலகுமலை; திருப்பூர் அருகேயுள்ள அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி திருவீதி உலா, அபிஷேகம், ஆராதனை நடந்தது. கட்டளைதாரர்களால் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலா நடத்தப்படுகிறது. வரும் 10ல் திருக்கல்யாண உற்சவம், 11ம் தேதி காலை, 6:00 மணிக்கு சுவாமி தேர் ஏற்றம், மதியம், 12:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும் 12ல் பரிவேட்டை, 13ல் சுவாமி திருவீதி உலா, 14ல் தரிசனம், மஞ்சள் நீராடல், அன்னதானம் நடக்கிறது.