பதிவு செய்த நாள்
07
பிப்
2025
10:02
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்ய தேசமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் பிரம்மோற்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான தை மாத பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரத்தில் எழுந்தருளிய உலகளந்த பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா வந்தார். இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 3ல், காலை ஹம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் உலகந்த பெருமாள் வீதியுலா வந்தார். இதில், மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 4ம் தேதி காலை கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகன உற்சவமும், நான்காம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபை உற்சவமும் நடந்தன. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று காலை பல்லக்கிலும், இரவு யாளி வாகனத்திலும் எழுந்தருளிய உலகளந்த பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.