பதிவு செய்த நாள்
07
பிப்
2025
12:02
தொண்டாமுத்தூர்; பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரின், 65வது நாண் மங்கல விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரின், 65வது நாண் மங்கல விழா, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலை வகித்தார். வேள்வி வழிபாடுகள், சாந்தலிங்கப்பெருமான் திருமஞ்சனம், பேரூர் ஆதினத்திற்கு, புனித நீராட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், குரு மூர்த்தங்களின் வழிபாடு செய்து, கொழுக்காட்சியில் எழுந்தருளினார். பல்வேறு சமய, தமிழ் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொண்டர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஆதினத்திடம் ஆசி பெற்றனர். இவ்விழாவில், திருநெறிய தெய்வத் தமிழ் வழிபாட்டு மலர் மற்றும் திருக்கயிலாயப் பரம்பரை மெய் கண்ட சந்தானம் திருப்பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வருகை பதிகம் ஆகிய நூல்களை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் வெளியிட, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக்கொண்டார். மாலையில், ஒயிலாட்டம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.