பக்தர்கள் சார்பில் கொடுத்த வெள்ளி வேல்; பூஜைக்கு தர ஹிந்து அறநிலையத்துறை மறுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2025 05:02
ஆண்டிபட்டி; பழனி பாதயாத்திரை பக்தர்கள் சார்பில் சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வழங்கப்பட்ட வெள்ளி வேலை பாதயாத்திரை பூஜைக்கு தர ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்ததால் பாதயாத்திரை பக்தர்கள் வேல் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
சக்கம்பட்டி ஓம் சரவணபவ முருகா சேவா டிரஸ்ட் மற்றும் தைப்பூச பழனி பாதயாத்திரை குழு கடந்த பல ஆண்டுகளாக சக்கம்பட்டியில் இருந்து தைப்பூச விழாவிற்காக பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். பக்தர்கள் சார்பில் 2016ம் ஆண்டு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் செய்யப்பட்டு சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தாங்கள் கோயிலுக்கு கொடுத்த வெள்ளி வேலை தங்களுடன் பூஜை செய்வதற்காக சுமந்து சென்று, தைப்பூச விழா முடிந்த பின் மீண்டும் கோயிலில் ஒப்படைப்பது வழக்கம். சக்கம்பட்டி கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தற்போது ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினம் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வெள்ளி வேலை பூஜைக்காக ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். தருவதாக ஒப்புக்கொண்ட அதிகாரிகள் ஒப்படைப்புக்கான கையெழுத்தும் மூன்று நாட்களுக்கு முன் பெற்றுள்ளனர். பக்தர்கள் பாதயாத்திரை கிளம்பும் நேரத்தில் வேல் கொடுக்க மறுத்த அலுவலர்கள் கோயிலை பூட்டி சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வெள்ளி வேல் கேட்டு வந்த பாதயாத்திரை பக்தர்கள் வேல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தனர். வேல் கிடைக்கததால், தங்களிடம் பெற்ற ஒப்புதல் கடிதத்தை கேட்டு பிரச்னை செய்தனர். பா.ஜ., ஹிந்து முன்னணி நிர்வாகிகள், ஆண்டிபட்டி போலீசார் பக்தர்களை சமாதானம் செய்தனர். கோயில் செயல் அலுவலர் உட்பட ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இரவு 11:00 மணிவரை காத்திருந்த பாதயாத்திரை பக்தர்கள் வேல் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் பாதயாத்திரை சென்றனர்.