பதிவு செய்த நாள்
13
பிப்
2025
01:02
புதுடில்லி: உலக அளவில் 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முதல் முயற்சியாக, திருப்பதியில் பிப்.,17 முதல் 19 வரை மாநாடு நடக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத ஒரு முயற்சியாக, உலக அளவில் உள்ள பிரபலமான 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆன்மிக சுற்றுலாக்களை முறையாக ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களுக்கான சுற்றுலா சந்தை மதிப்பு ஆண்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய். இத்தகைய வருவாய் ஈட்டக்கூடிய ஆன்மிக சுற்றுலாவை ஒரே நெட்வொர்க் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இது மக்கள் எளிதான முறையில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோவில்களை அணுகுவதை உறுதி செய்யும். இது தொடர்பாக, சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி பிப்ரவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை திருப்பதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஐ.டி.சி.எக்ஸ் 2025 மாநாடு ஹிந்து ,சீக்கிய, பவுத்த மற்றும் ஜெயின் ஆன்மிக நிறுவனங்களை ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது.
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, உலகளவில் ஆன்மிக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. உதாரணமாக, வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் 32,000 முதல் 40,000 யாத்ரீகர்கள் வருகிறார்கள். இது தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்தில் 10,000 முதல் 15,000 வரை இருந்தது. அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு தினமும் குறைந்தது ஒரு லட்சம் பேர் வருகை தருகின்றனர். இது கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய எண்ணிக்கையை விட அதிகமாகும். கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு தினசரி 6,000 முதல் 7,000 வரை பக்தர்கள் வருகின்றனர். இது கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய காலக்கட்டத்தில் 4,000 ஆக இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதம் வளர்ந்து அடைந்து வருகிறது. இதனால் மக்களுக்கு எளிதான முறையில் பயணம் மேற்கொள்ள, உலக அளவில் உள்ள கோவில்கள் அனைத்தையும் ஒரு கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர வேலை நடந்து வருகிறது. கூட்டமைப்பில் இடம் பெறும் கோவில்களில் பெரும்பகுதி இந்தியாவில் இடம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.