பதிவு செய்த நாள்
17
பிப்
2025
03:02
உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், தண்டரை கிராமத்தில் காமாட்சி அம்பாள் சமேத குந்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி ஆகிய நாட்களில், சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இந்நிலையில், கோவிலின் நுழைவு வாயில் மற்றும் சுற்றுச்சுவர் சேதமடைந்து இருந்தது. கடந்த சில ஆண்டுக்கு முன் சேதமடைந்து இருந்த சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு, புதிதாக கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்தது. ஆனால், பணிகள் முழுமையாக முடியாமல் அரை குறையாக விடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கோவில் நுழைவு வாயில் சேதமடைந்து உள்ளது. இதனால், கோவில் நுழைவு வாயில் கதவை பூட்ட முடியாததால், வளாகம் எப்போதும் திறந்த நிலையிலே உள்ளது. கோரிக்கை விடுக்கப்பட்டும், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, குந்தீஸ்வரர் கோவிலை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கோவில் செயல் அலுவலர் அமுதா கூறியதாவது, ‘‘தண்டரை குந்தீஸ்வரர் கோவிலை பழமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்க உள்ளது,’’ என்றார்.