ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த, 16ம் தேதி சிவராத்திரி விழா கணபதி பூஜை, கிராம தேவதை பூஜையுடன் விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் வால்மிகீஸ்வரர், மரகதாம்பிகை தாயார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் வெவ்வேறு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 27ம் தேதி இரவு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, உற்சவர் ராவணாசூர வாகனத்தில், கோலாட்டம் புடைசூழ திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.