பதிவு செய்த நாள்
03
மார்
2025
10:03
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசிப்பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 12ம் தேதி தேரோட்டமும், 13ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதிலும் குறிப்பாக கந்த சஷ்டி திருவிழா, வைகாசி விசாக திருவிழா, பங்குனி உத்திரம், திருகார்த்திகை, மாசி திருவிழா உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் மாசி திருவிழா இன்றைய தினம் கோலாகலமாக கொடியேற்றதுடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதை தொடர்ந்து கோவில் கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியே பட்டாச்சாரியார் முத்துக்குமார சுவாமி ஏற்றினார்.
அப்போது அங்கு இருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் முருகனுக்கு ஆரோகரா கந்தனுக்கு ஆரோகரா கடம்பனுக்கு ஆரோகரா வேலனுக்கு ஆரோகரா என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷமிட்டனர். அதை தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், பன்னீர், இளநீர், திரவிய பொடி, திருநீறு உள்பட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. அப்போதும் பக்தர்கள் முருகனுக்கு ஆரோகரா என கோஷமிட்டனர். 12 நாட்கள் நடைபெறும். இந்த மாசி திருவிழாவில் 7 ஆம் திருநாளான 9 ஆம் தேதி சுவாமி சண்முகம் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். 8 ஆம் திருநாளான 10 ஆம் தேதி அதிகாலையில் சுவாமி சண்முகம் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி வீதி உலா வருவார். அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு மேல் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10 ஆம் திருநாள் தேரோட்டம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனி தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். 11 ஆம் திருநாளான 13 ஆம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.