பதிவு செய்த நாள்
03
மார்
2025
10:03
நாகர்கோவில்; பெண்களின் சபரிமலை எனப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கேரள மாநிலத்திலிருந்து பெண்கள் தலையில் இருமுடி ஏந்தி கடலில் குளித்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவதால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை எனப்படுகிறது. இங்கு மாசி கொடை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 4:30 -மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. பிறகு காலை 7:57 மணிக்கு தந்திரி சங்கரநாராயணன் ஐயர் கொடிமரத்தில் கொடியேற்றினார். மேற்குவங்க கவர்னர் டாக்டர் டி.வி.ஆனந்த் போஸ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், எம்.எல்.ஏ., எம்.ஆர். காந்தி தேவசம் போர்டு அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து ஹைந்தவ ஹிந்து சேவா சங்கம் நடத்தும் 88 - வது சமய மாநாட்டை கவர்னர் டாக்டர் டி.வி.ஆனந்த் போஸ் துவக்கி வைத்தார். முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றினார். வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி, திருநெல்வேலி ஆதீனமடம் மவுன மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள் ஆசி வழங்கினர். இவ்விழா மார்ச் 11 வரை நடக்கிறது. மார்ச் 7ல் வலிய படுக்கை என்ற மகா பூஜை நடக்கிறது. 10 ல் சக்கர தீ வெட்டி ஊர்வலம், 11ல் நள்ளிரவில் ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவையொட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.