வால்பாறை; வால்பாறையில் உள்ள முருகர் கோவில்களில் நடந்த கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத கிருத்திகை மற்றும் சஷ்டி பூஜை இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து, பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி முருகனை வழிபட்டனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கிருத்திகை மற்றும் சஷ்டி பூஜையை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.