பதிவு செய்த நாள்
08
மார்
2025
12:03
பொள்ளாச்சி; மாசாணி அம்மன் கோவில் நிதியிலிருந்து 14 கோடி ரூபாய் எடுத்து, ஊட்டியில், ரிசார்ட் கட்டும் அறநிலையத்துறை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலையில், பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, 17 அடி உருவமாக அம்மன் சயன கோலத்தில் அருள்புரிகிறார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை 100 கோடி ரூபாய், வங்கியில், டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த பணத்தில் இருந்து 14 கோடி ரூபாய் எடுத்து, ஊட்டியில் காந்தல் வட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே, ரிசார்ட் கட்ட, அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. அங்குள்ள பழைய குடியிருப்புகள் அகற்றப்பட்டு, புதிய குடியிருப்புகளும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாசாணி அம்மன் கோவில் நிதியை எடுத்து, ஊட்டியில் ரிசார்ட் கட்டும் முடிவுக்கு, அக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத அதிகாரிகளை தேர்வு செய்து, அவர்களை இங்கு நியமித்து, ரிசார்ட் கட்டும் பணியை துவக்க, அறநிலையத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர். இது, பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூரைச் சேர்ந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஏற்பாட்டில் தான், இந்த அதிகாரி மாற்றம், விடுதி கட்டும் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலும், ரிசார்ட் கட்டும் விவகாரமும், தி.மு.க., ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கவர்னர், முதல்வர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ள பக்தர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும், ரிசார்ட் கட்டும் திட்டத்தை நிறுத்தவும் வலியுறுத்தி உள்ளனர். - நமது நிருபர் -