பதிவு செய்த நாள்
12
மார்
2025
11:03
திருப்போரூர்; திருப்போரூர் ஒன்றியம், நாவலுார் அருகே தாழம்பூர் ஊராட்சி, கிருஷ்ணா நகரில், திரிசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஞானசக்தியாக சரஸ்வதி தேவியும், இச்சா சக்தியாக லட்சுமி தேவியும், கிரியா சக்தியாக தாய் மூகாம்பிகையும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது தனிச் சிறப்பு. இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாத பிரம்மோத்சவம் விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு கடந்த மார்ச் 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 9ம் தேதி, 10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு கல்வி யாக வழிபாடும் நடைபெற்றது. முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி முப்பெரும் தேவியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனைகள் நடைபெற்றன. உத்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனைகள் நடைபெற்றன. பின், தேவியர் மூவரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். கேளம்பாக்கம், தாழம்பூர், நாவலுார், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாடவீதிகளில் தேர் வலம் வந்தபின், தேரடியை அடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் மற்றும் அறங்காவலர் கிருஷ்ணன் குட்டி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.