பதிவு செய்த நாள்
13
மார்
2025
10:03
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சினக்கத்துார் பகவதி அம்மன் கோவில். இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் பூரம் திருவிழா நடக்கிறது.
நடப்பாண்டு, திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று காலை பாரம்பரிய கலை வடிவங்களான ‘பூதன்-திறை’களின் அம்மன் சன்னதிக்கு வந்தபின் விழா துவங்கியது. காலை, 6:30 மணிக்கு ஆறாட்டு கொடியோற்றமும், மதியம் கோவிலின் கீழ் உள்ள ஏழு உப கோவில்களில் இருந்து யானைகளின் அணிவகுப்பும், குதிரை வடிவங்கள் அம்மன் சன்னதியை நோக்கி வந்தன. மாலை, 3:00 மணிக்கு குதிரை வடிவங்கள் கோவில் வளாகத்தில் அணிவகுத்து, போட்டி போட்டு மேலே வீசி பிடிக்கும் பிரசித்தி பெற்ற குதிரை விளையாட்டு நடந்தது. இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். பஞ்ச வாத்தியம் முழங்க ஒற்றப்பாலம், பாலப்புரம், மீட்டன, எறக்கோட்டிரி, பல்லார்மங்கலம் ஆகிய உப கோவில்களின், 17 யானைகள் தெக்குமங்கலம், வடக்குமங்கலம் ஆகிய உபகோவில்களில் இருந்து வந்தன. யானைகள் கிழக்கு பகுதியில் எதிர் முகமாய் அணிவகுத்து நின்று, முத்துமணி குடைகள் மாற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிரம்மாண்ட வான வேடிக்கை நடந்தது. தொடர்ந்து திருத்தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.