பதிவு செய்த நாள்
15
மார்
2025
01:03
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 10ல் துவங்கியது.
கடந்த, 7ல் அங்குரார்ப்பணம், 8ல் திருக்கொடியேற்றம் நடந்தன. அன்று இரவு உற்சவ மூர்த்தி மலை மீது இருந்து, தேர்ப்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.
தினமும் இரவு சிம்ம வாகனம், மயில், நந்தி, நாகம், ரிஷப வாகன உத்சவங்கள் நடந்தன. மார்ச் 13 இரவு, 9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் மற்றும் யானை வாகன உத்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உட்பட மூன்று மாநிலங்களில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு, 10:00 மணிக்கு பல்லக்கு உற்சவம், நாளை இரவு, 7:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.