பதிவு செய்த நாள்
17
மார்
2025
10:03
தஞ்சாவூர்,- இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கருணாசாமி கோவிலில், சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் அடுத்த கரந்தையில், பெரியநாயகி அம்மன் உடனுறை கருணாசாமி கோவில் என்கிற, வசிஷ்டேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து உள்ளார். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் சோழ மன்னனுக்கு தோல் நோயை குணமாக்கியதாக தல வரலாறு கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 3,4,5 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை நடைபெறும். அதேபோல் இந்தாண்டு சூரிய பூஜை இன்று அதிகாலை நடைபெற்றது. சூரிய உதயத்தில் கருணாசுவாமி மீது சூரிய கதிர்கள் விழுந்ததும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் ஆகிய அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.