பதிவு செய்த நாள்
17
மார்
2025
11:03
மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் அடுத்த ஒரத்துார் கிராமத்தில், வேம்புலி அம்மன் கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது.
ஒரத்துார் கிராமத்தில் பழமையான, வேண்டிய வரம் தரும் வேம்புலி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் புனரமைப்பு பணிகள் செய்ய விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் முடிவு செய்து, திருப்பணிகள் நடைபெற்று வந்தன. வேம்புலி அம்மன் கோவில், மண்டபம், நவகிரக தெய்வங்களின் கோவில், கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுற்று, மஹா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, யாகசாலை அமைக்க பந்தக்கால் நடப்பட்டது. அதன்படி, கடந்த வியாழன் அன்று, காலை 9:00 மணிக்கு கிராம தேவதை வழிபாடு, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. பின் லட்சுமி ஹோமம், கோ பூஜை, நவகிரக யந்திர ஸ்தாபனம், வேத பாராயணம், பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது. அதன் பின், மூன்றாம் கால பூஜை ஆரம்பித்து, யந்திர உபச்சாரம், தேவார திருமுறைகள் விண்ணப்பம், மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மங்கல இசை, நான்காம் கால யாகசாலை பூஜைகள், விசேஷ திரவிய ஹோமம், நாடி சந்தனம், தத்வார்ச்சனை, ஸ்பருஷாஹீதி, நாமகரணம், தம்பதி சங்கல்பம், கலச புறப்பாடு நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு மேல் 10:50 மணியளவில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், விமான கோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவர் வேம்புலி அம்மன் மற்றும் நவகிரகங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மஹா அபிஷேக அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை மற்றும் தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், வேம்புலி அம்மனுக்கு தினமும் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெறும்.