சபரிமலையில் குவிந்த பக்தர்கள்; புதிய பாதையில் தரிசனம் கண்டு பக்தர்கள் பேரானந்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2025 05:03
சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 14ம் தேதி மாலை திறக்கப்பட்டது. திருப்பதி மாடலில் சன்னிதானம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையில் பக்தர்கள் தரிசன செய்ய குவிந்து வருகின்றனர்.
சபரிமலையில் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மார்ச் 15 முதல் மார்ச் 19ம் தேதி வரை நாள்தோறும் வழிபாடுகள் நடைபெறுகிறது. வழக்கமாக பக்தர்கள், 18 படிகளில் ஏறியதும் இடது பக்கம் திரும்பி, மேல் பாலத்தில் ஏறி மீண்டும் கோவிலின் வடக்கு பக்கம் இறங்கி தரிசனம் செய்து வந்தனர். சில வினாடிகள் மட்டுமே அவர்கள் சுவாமியை தரிசிக்கும் நிலை இருந்தது. இதனால் திருப்பதி மாடலில் கொடி மரத்திலிருந்து பக்தர்களை நேரடியாக தரிசனத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக கொடி மரத்தின் இரு பக்கங்கள் வழியாக புதிதாக இரும்பு பாதை அமைக்கப்பட்டது. நடுவில் உண்டியலும், இரண்டு பக்கமும் பக்தர்கள் நடந்து செல்லவும் வசதி செய்யப்பட்டது. சோதனை அடிப்படையில் இம்முறை அமல்படுத்தப்பட்டள்ளது. நடைதிறப்பு முதல் தினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலை உஷ பூஜையை தொடர்ந்து நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் திருப்தியாக தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.