பதிவு செய்த நாள்
19
மார்
2025
10:03
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. நான்கேகால் மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மலையைச் சுற்றி தேர் வலம் வந்தது. நாளை தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.
இன்று காலை 5:30 மணிக்கு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து, முத்தங்கி அலங்காரமாகி ரோஸ் மற்றும் பச்சை பட்டால் பரிவட்டம் கட்டப்பட்டு கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பெரிய வைரத் தேரில் எழுந்தருளினர். கோயிலில் கருப்பண்ண சுவாமிக்கு பூஜை முடிந்து, தேர் சக்கரங்களில் தேங்காய் உடைக்கப்பட்டது. சிவாச்சாரியார் சுவாமிநாதன் தேரில் ஏறி வெள்ளை வீசியதும் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். காலை 6:29 மணிக்கு நிலையிலிருந்து தேர் புறப்பாடானது. விநாயகர் எழுந்தருளிய சட்டத்தேர் முன்செல்ல, பெரிய வைரத்தேர் நான்லே கால் மணி நேரம் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வலம் வந்து காலை மணிக்கு 10:50 மணிக்கு நிலைநிறுத்தப்பட்டது. பின்பு கோயில் நடை திறந்து சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் கமிஷனர் லோகநாதன், சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா, மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதாவிமல் பங்கேற்றனர்.