பதிவு செய்த நாள்
21
மார்
2025
12:03
ராய்ச்சூர்; ராய்ச்சூர் மாவட்டம், சிரவாரா தாலுகாவின் கல்லுாரில் மஹாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இது, வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலாகும். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். காணிக்கையும் அதிகம் வசூலாகிறது.
அர்ச்சகர் நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போன்று பூஜையை முடித்த பின், நடையை சாத்தி விட்டு, வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம கும்பல், பூட்டை உடைத்து கோவிலுக்குள் நுழைந்தனர். 80 கிராம் எடையுள்ள வெங்கடேஸ்வர சுவாமியின் கிரீடம், 30 கிராம் எடையுள்ள லட்சுமி கிரீடம், 140 ரூபாய் மதிப்புள்ள பாதங்கள் உட்பட 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி கொண்டு தப்பியது. நேற்று காலை பூஜை செய்ய, அர்ச்சகர் கோவிலுக்கு வந்த போது, திருட்டு நடந்திருப்பதை பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சிரவாரா போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்கின்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலில், அதிக அளவில் தங்க நகைகள் இருப்பது தெரிந்தும், பாதுகாப்பு ஊழியர் நியமிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கண்காணிப்பு கேமராவும் பொருத்தவில்லை. இதை நோட்டம் விட்டு, மர்ம கும்பல் திருட்டில் ஈடுபட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருடர்களை கண்டுபிடித்து, நகைகளை மீட்கும்படி போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளனர். போலீசாரும் சம்பவ இடத்தின் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனர். திருட்டில் உள்ளூர்வாசிகளில் யாருக்காவது தொடர்பிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.