பதிவு செய்த நாள்
21
மார்
2025
02:03
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் கோயில் ரத வீதியில் வரும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து, இன்று கடுமையான வெப்ப சலனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள், கோயிலில் இருந்து வெளியேறி ரதவீதியில் நடந்து சென்றனர். ஆனால் வெயில் சுட்டெரித்ததால், காலணி இன்றி நடந்து சென்ற பக்தர்கள் ஓடோடி கடைகளில் முன்புள்ள பந்தல் நிழலை தேடி ஒதுங்கினர். மேலும் வயதான மூத்த பக்தர்கள், குழந்தைகள் வெப்ப சலனத்தில் பெரிதும் அவதிப்பட்டனர். இதனை தவிர்க்க கோயில் தெற்கு, வடக்கு, கிழக்கு ரதவீதியில் தற்காலிக பந்தல் அமைக்க பக்தர்கள் கோரினர்.
ஆறுதல்: பக்தர்களை பாதுகாக்க வேண்டி நேற்று ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான் ஏற்பாட்டில் கோயில் கிழக்கு ரத வீதியில் தற்காலிகமாக நிழல் தரும் பந்தல் அமைத்தனர். இது பக்தர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இதேபோல் வடக்கு, தெற்கு ரதவீதியில் பந்தல் அமைக்க நகராட்சி, கோயில் நிர்வாகமும் முன்வர வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.