பதிவு செய்த நாள்
21
மார்
2025
05:03
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை சுவர்களில் முருகப்பெருமான் ஓவியங்கள், பக்தி வாசகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. பவுர்ணமிதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி பகுதி மக்கள் தினமும் ‘வாக்கிங்’ செல்கின்றனர். கந்தசேனா அமைப்பினர் கிரிவல பாதையின் இருபுறமும் உள்ள சுவர்களில் கட்டட உரிமையாளர்களின் சம்மதம் பெற்று திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர்துதி, அரோகரா கோஷங்கள், 108 கந்தன் போற்றி, ஓம் மந்திரம், வேல், மயில், சேவல் ஓவியங்களுடன் பக்தர்களின் கருத்தை கவரும் வகையில் முருகப்பெருமானின் ஓவியங்களும் வரைந்து வருகின்றனர். அமைப்பு நிர்வாகிகள் லட்சுமணன், அன்பழகன், சவுந்தரம் சேகர், சரவணன், பாலகிருஷ்ணன், சரவணகுமார், சீனிவாசன் கூறுகையில், ‘கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிரிவலம் செல்லும்போது பக்தி சிந்தனையை மேலோங்க செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 இடங்களில் எழுதப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையை சுற்றி 100 இடங்களில் பக்தி வாசகங்கள் எழுத உள்ளோம்’’ என்றனர்.