குழந்தை வேலப்பர் மலைக்கு படிப்பாதை அமைக்கும் பணிகள் மும்மரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2025 10:03
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் மலைக்கு படிப்பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
பழனி முருகன் கோயிலின் உப கோவிலாக ஒட்டன்சத்திரம் அருகே குழந்தை வேலப்பர் சுவாமி கோயில் உள்ளது. கோயில் 800 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த நிலையில் குழந்தை வடிவத்தில் அருள் புரிந்து வருகிறார். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அனைவரும் குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறிய பின்பு நேர்த்திக்கடனாக மிட்டாய் பிஸ்கட் வைத்து வழிபட்டு செல்கின்றனர். இதன் அருகில் உள்ள மலையின் மேலும் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. மலையில் உள்ள கோயிலுக்குச் செல்ல வசதியான பாதை இல்லை. கரடு முரடான செடிகளுக்கு நடுவே சில இடங்களில் கற்களை கொண்டு படி அமைக்கப்பட்டுள்ளது. இவை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் மலை மேல் சென்று குழந்தை வேலப்பரை தரிசனம் செய்வது மிகவும் சிரமமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள ஆன்மீகவாதிகள், தன்னார்வலர்கள் இணைந்து படிப்பாதையை அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். இந்த பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மலை மேல் உள்ள குழந்தை வேலப்பரை தரிசனம் செய்வதற்கு படிப்பாதை அமைக்கும் பணியை முருக பக்தர்கள் வரவேற்று உள்ளனர். குழந்தை வேலப்பர் மலையை சுற்றி கிரிவலப் பாதை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.