பதிவு செய்த நாள்
27
மார்
2025
10:03
பல்லடம்; பருவாய் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள், 54வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
பல்லடத்தை அடுத்த, பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் பாதயாத்திரை காவடி குழுவினர் ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். கடந்த, 1971ம் ஆண்டு துவங்கிய இந்த பாதயாத்திரை பயணம், தொடர்ந்து, ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நேற்று, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், 54வது ஆண்டு பாதயாத்திரை பயணத்தை துவக்கினர். பாதயாத்திரை குழு தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். முன்னதாக, மாலை அணிந்த பக்தர்கள், பருவாய் மாரியம்மன் கோவில் திடலில் கூடி காவடி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்த பின், அங்கிருந்து நடை பயணமாக சென்ற குழுவினர், விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தனர். இதனையடுத்து, குடும்பத்தினர் ஒன்று கூடி அவர்களை பாதயாத்திரைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்று, திரும்பி வரும் வழியில் பேரூர் கோவிலில் தரிசனம் செய்வோம். இதனையடுத்து, யுகாதி பண்டிகை அன்று கிராமத்துக்கு திரும்புவோம். வெள்ளியங்கிரி மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தில் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவோம். கொரோனா காலத்தை தவிர்த்து, 54 ஆண்டுகளாக இந்த வெள்ளியங்கிரி பாதயாத்திரை மற்றும் வழிபாடு தொடர்ந்து நடந்து வருகிறது. ஆண்டுதோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது என ஈஸ்வரன் கூறினார்.