பதிவு செய்த நாள்
31
மார்
2025
04:03
ரிஷிவந்தியம்; ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் சுற்றுச்சுவர், கோபுரம், நெற்களஞ்சியம் ஆகியவை பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூலவர் ரங்கநாயகி தாயார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள், கோதண்டராமர், லட்சுமணர், சீதாபிராட்டி சுவாமி சன்னதிகளை பாலாலயம் செய்வதற்கான பூஜை நேற்று நடந்தது. இதற்காக, யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ரங்கநாத பட்டாட்சியர் தலைமையிலான குருக்கள் பூஜைகளை செய்தனர். பாலாலயம் செய்யப்பட்டதால் பக்தர்கள் மூலவர் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. அதற்கு மாறாக, கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் உற்சவர் மண்டபத்தில், உற்சவர் ரங்கநாயகி தாயார், அரங்கநாத பெருமாள் சுவாமிகள் எழுந்தருள செய்யப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உற்சவர் சுவாமிகளை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, கும்பாபிேஷகம் நடந்ததும் மீண்டும் மூலவர் சுவாமியை தரிசனம் செய்யலாம்.