அழிகிறது தமிழ் எழுத்து வரலாறு; பூலாங்குறிச்சி கல்வெட்டுக்கள்; தொல்லியல் துறை பாதுகாக்குமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2025 03:04
திருப்புத்தூர்; தமிழ் மொழியின் எழுத்து வரலாறு ஆதாரமான திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி மலையில் வடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பாதுகாப்பில்லாமல் அழிந்து வருகின்றன. தொல்லியல் துறை பாதுகாப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் பாதுகாப்பின்றி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மலைசூழ்ந்த எல்லைக் கிராமம் பூலாங்குறிச்சி. இங்கு ஆதிமனிதன் வாழ்ந்த குகைகள் நிறைந்த தொன்மையான மலைப்பகுதி உள்ளது. அதில் ஒரு குன்றின் சரிவில் தமிழ்நாட்டின் தொன்மையான கல்வெட்டுகளிலேயே மிகவும் பெரிய கல்வெட்டு உள்ளது. கி.பி.5ம் நூற்றாண்டுக்கு முற்பட்டத் தொன்மை வாய்ந்த இக்கல்வெட்டு ‛பூலாங்குறிச்சி கல்வெட்டு’ என்று அழைக்கப்படுகிறது. 45 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்ட இக்கல்வெட்டு 3 பகுதிகளாக வடிக்கப்பட்டுள்ளன. மிகவும் ஒழுங்கான முறையில் எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன. அதிலுள்ள எழுத்து முறை, தமிழ் பிராமி எழுத்திலிருந்து தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்துக்கு மாறி வந்த நிலையைக் காட்டுகிறது என்று கல்வெட்டியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்தகைய எழுத்துமுறையைக் கொண்ட மிகப்பெரிய கல்வெட்டுகளும் இவைதான். இதனால் தமிழ் மொழி எழுத்து வரலாற்றின் முக்கியமான ஆதாரமாக உள்ளது.
தமிழகத்தில் கிடைத்துள்ள தொன்மையான கல்வெட்டுகளில் கி.பி. 3 முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் 1000க்குள் தான் உள்ளன. அதில் பெரும்பாலான கல்வெட்டுகள் ஒரு சில வரிகளை மட்டுமே உள்ளன. அதற்கு மாறாக மிக விரிவானதும் முக்கித்துவம் வாய்ந்ததுமாக பூலாங்குறிச்சிக் கல்வெட்டு உள்ளது. களப்பிரர் காலம், தமிழகத்தில் நிலவிவந்த நில நிர்வாக அமைப்பு பற்றிய வரலாறு, தமிழ் எழுத்துமுறையின் வரலாறு எனப் புதிய தகவல்களை கொண்டுள்ளது. பௌத்த சமணத்தை ஆதரித்த களப்பிரர் மன்னர்களின் ஆட்சியில் பிராமணர்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் குறித்த பிரம்மதேயம் எனப்படும் கல்வெட்டு ஆகும். தமிழ்நாட்டில் நிலம் தொடர்பான தகவல் உள்ள தொன்மையான கல்வெட்டும் இதுவே. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் எந்தவிதப் பாதுகாப்போ, பராமரிப்போ இன்றி உள்ளன. தமிழகத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால் பெயரளவில் ‛பூலாங்குறிச்சி கல்வெட்டு’ என்று அடையாள போர்டு மட்டுமே உள்ளது. மழையிலும்,வெயிலிலும் தற்போதும் பாதிக்கப்பட்டு குன்றின் மேல்பகுதி உரிந்து வருகிறது. இதனால் கல்வெட்டுகளின் ஒரு பகுதி படிக்க முடியாத அளவுக்கு அழிந்துவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் அனைத்து எழுத்துக்களும் அழிந்து விடும் வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை குடுமியான்மலை இசைக் கல்வெட்டுகளைப் பாதுகாக்க இந்தியத் தொல்லியல் துறையினர் மண்டபம் போன்ற அமைப்பைக் கட்டியிருக்கிறது. அதுபோலப் பூலாங்குறிச்சி கல்வெட்டு மீதும் கட்டலாம். கல்வெட்டுக்களில் உள்ள தகவலை தெரிவிக்கும் அறிவுப்பு பலகையையும் நிறுவி, பாதுகாவலர், வழிகாட்டியையும் நியமிக்கவேண்டும். வரலாறு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான வசதிகளை அப்பகுதியில் ஏற்படுத்தலாம்.
வரலாறு கூறும் கல்வெட்டுக்கள்; சரியான வரலாற்றை எழுதுவதற்கு உதவும் மிகவும் நம்பகமான ஆதாரம் கல்வெட்டு ஆகும். ஆங்கிலேயர்களால் 1784 ல் கல்வெட்டு சேகரிக்கும் பணி துவங்கியது. மேலும் கல்வெட்டை படி எடுத்து பதிவும் செய்யப்பட்ட ஆவணமாக்கினர். இன்று வரை தொல்லியல் துறையினர் மற்றும் ஆர்வலர்கள் மூலம் தொடர்கிறது. கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை காலத்திற்கேற்ப தமிழ் பிராமி, வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்து என்று வகைப்படுத்தியுள்ளனர். இதுவரை நாடளவில் கண்டறியப்பட்டுள்ள 80 ஆயிரம் கல்வெட்டுகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இருக்கின்றன.அதாவது இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் சுமார் பாதியளவு கல்வெட்டுகள் தமிழ்நாட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த 93 தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் பூலாங்குறிச்சி கல்வெட்டும் ஒன்று.தமிழின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் முக்கியமான ஆதாரமாக உள்ளது.