ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உடைந்த நிலையில் அபிஷேக சங்குகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2025 11:04
ராமேஸ்வரம்;ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படும் சங்குகள் அழுக்கு படிந்தும், உடைந்தும் கிடந்ததை கண்டு பக்தர்கள் முகம் சுளித்தனர்.இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்கின்றனர் மேலும் பக்தர்கள் கோயிலில் 108 மற்றும் 1008 சங்குகள் அபிஷேகம் பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இப்பூஜை கோயிலுக்குள் சுவாமி சன்னதி அருகில் பக்தர்கள் முன்னிலையில் சங்குகளை வைத்து குருக்கள் பூஜை செய்து பிரசாதம் வழங்குவர். இதற்காக கோயில் நிர்வாகம் ரூ.3000 மற்றும் ரூ.10 ஆயிரம் கட்டணமும் வசூலிக்கிறது.
பக்தர்கள் முகம் சுளிப்பு; கோயிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் ஆன்மிக நன்கொடையாளர்கள் தானமாக வழங்கிய 1008 சங்குகளை முறையாக சுத்தம் செய்து பராமரிக்காமல் பூஜை முடிந்ததும் சாக்கு மூடையில் அள்ளி போட்டு மரப்பெட்டிக்குள் வைக்கின்றனர். இதனால் 90 சதவீதம் சங்குகள் அழுக்கு படிந்தும், முனை பகுதிகள் உடைந்தும் உள்ளன. இதனை பூஜைக்கு பயன்படுத்துவதை காணும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். கோயிலில் தீர்த்த நீராடல், தரிசன கட்டணம், உண்டியல் வருவாய் என ஓராண்டிற்கு ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வருவாய் கிடைக்கும் நிலையில் அழுக்கு படிந்து உடைந்த சங்குகளை பயன்படுத்துவது வேதனையளிக்கிறது. கோயிலுக்கு புதிய சங்குகள் வழங்க ஆன்மிக நன்கொடையாளர்கள் தயாராக இருந்தும் அதனை பெற ஹிந்து சமய அறநிலையத்துறை முன்வரவில்லை. கோயில் புனிதம், பக்தர்கள் நம்பிக்கையை பாதுகாத்திட புதிய அபிஷேக சங்குகள் வாங்கிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.