விருப்பன் திருநாள்; தங்க ஹம்ஸ வாகனத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2025 02:04
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று காலை உற்சவர் நம்பெருமாள் காலை தங்க ஹம்ஸ வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும், 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் “சித்திரைத்தேர் திருவிழா விருப்பன் திருநாள் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் ஆறாம் திருநாளான இன்று காலை தங்க ஹம்ஸ வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏழாம் திருநாளான நாளை 24ம் தேதி மாலை நெல்லளவு கண்டருளுகிறார். விருப்பன் திருநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘சித்திரை திருத்தேர்’ வடம் பிடித்தல் 9ம் திருநாளான வரும் 26ம் தேதி காலை 6.00 மணியளவில் நடைபெற உள்ளது.