பதிவு செய்த நாள்
23
ஏப்
2025
04:04
வாலாஜாபாத்; வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கெங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் விழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி முன்னதாக கடந்த 20ம் தேதி, காலை 7:00 மணிக்கு, பந்தகால் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பந்தகால் மர கம்பத்திற்கு குங்குமம், மஞ்சள் வைத்து அப்பகுதி பெண்கள் தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து கோவில் வளாகப் பகுதியில் பந்தகால் நடப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று காலை, குடம் அலங்காரத்தில் அம்மனுக்கு பெண் பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு படையலிட்டனர். மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழிச்சியும், இரவு 8:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.