பதிவு செய்த நாள்
23
ஏப்
2025
04:04
குமரலிங்கம்; பிரசித்தி பெற்ற கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, திருக்கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் தீர்த்தம் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
உடுமலை அருகே கொழுமத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுயம்பு ஸ்வரூபமாக அம்மன் அருள்பாலித்து வரும் கோவிலில், ஆண்டுதோறும், சுற்றுப்பகுதி கிராம மக்களால், சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழாவுக்கான திருக்கம்பம் கடந்த, 22ல் கோவிலில் நாட்டப்பட்டது. முன்னதாக, அமராவதி ஆற்றில் திருக்கம்பத்துக்கு அபிஷேக, அலங்காரம் செய்து, வலம் வந்தனர். திருக்கம்பத்துக்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து, தீர்த்தம் எடுத்து வந்து ஊற்றி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். வரும் மே 3ம் தேதி இரவு, 10:00 மணிக்கு கோவில் பூவோடு வைத்தல்; 4ம் தேதி வெங்கல பூவோடு வைத்தல், இரவு அன்னாபிஷேகம், அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. வரும் 6ம் தேதி இரவு, 8:30 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், சிம்ம வாகனத்தில், அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, புஷ்பரத சுவாமி புறப்பாடும், 8ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. திருவிழாவையொட்டி, கொழுமம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்கள் களைகட்டியுள்ளது.