பதிவு செய்த நாள்
24
ஏப்
2025
04:04
தாடிக்கொம்பு; திண்டுக்கல் அழகுபட்டி அருகே 12-ம் நுாற்றாண்டு வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் அழகுபட்டி மாலைகோவில்பட்டி ஓடை அருகே வீரன் ஒருவருடன் பெண் இருந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. வரலாற்று ஆய்வாளர் ந.தி.விஸ்வநாததாஸ், மாணவர் ரத்தினமுரளிதர், ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன்,பெருமாள்சாமி ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கூறியதாவது: வீரனின் வலது கையில் மார்பின் குறுக்கே நீட்டிய நிலையில் வாள் உள்ளது. இரு கையிலும் கங்கணம், தோளில் லாகு வளையம், தலையில் கரண்ட மகுடம் உள்ளது. கழுத்தின் பின்புறம் உத்திரியம் பறப்பது போலும் இடையில் கச்சையும் அதில் இடைகச்சையாணி வேலைப்பாட்டுடன் தொங்குவதும் கால்களில் தண்டையும் உள்ளது. இது வீரன் போரில் இறந்துவிட்டதை குறிக்கிறது.
பெண்ணின் முகம் வீரனை பார்த்தபடியும் கொண்டை சரிந்தும், காதில் வளையம் மார்பு கச்சையும் அணைத்தப்படி நெஞ்சில் ஆரம், இடது கை மார்பிற்கு கீழ் குடுவை , வலது கையில் வளரி போன்ற ஆயுதம் உள்ளதால் இவ்வீரனின் மனைவியும் யுத்த வீராங்கனையாக இருந்திருக்கலாம். குடுவை உள்ளதால் வீரன் இறந்ததும் அவருடன் உடன்கட்டை ஏறியிருப்பார். இருவரின் தலைக்கும் மேல் சூரியன் சந்திரன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இருவரின் முகமும் மிக தேய்ந்த நிலையில் உள்ளது. இந்நடுகல் சிறிய கல்லடுக்கில் உள்ளது. கல்லடுக்கின் மேல் உள்ள பலகை கல் இரண்டில் தொல் தமிழர் நினைவிடங்களில் உள்ள பல்லாங்குழிகள் போன்ற குழிகள் உள்ளது. இந்நடுகல்லின் காலம் 12-ம் நுாற்றாண்டு ஆகும் என்றனர்.