பதிவு செய்த நாள்
25
ஏப்
2025
12:04
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 7 காப்பு கட்டுடன் துவங்கும் நிலையில், மே 11 இரவு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க உள்ளார்.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா மே 7 அன்று காலை 9:00 மணிக்கு காப்பு கட்டுடன் துவங்க உள்ளது. அன்று முதல் தினமும் யாகசாலை பூஜைகள் நடந்து, இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஆடி வீதியில் சுற்றி யாகசாலை முன்பு மகா தீபாராதனை நடக்கும். மே 11 காலை 9:00 மணிக்கு பெருமாள், கருப்பண்ண சுவாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடக்க உள்ளது. அன்று இரவு 2:00 மணிக்கு பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, கத்தி, வேல், வளரி, தடி ஏந்தி, நெல்மணி தோரணம் சூடி பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். அப்போது கருப்பண்ண சுவாமியிடம் விடை பெற்று, அதிகாலை 4:00 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வைகையில் இறங்க உள்ளார். மறுநாள் தல்லாகுளத்தில் காலை 9:30 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, பல ஆயிரம் பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்க உள்ளனர். மதியம் ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்து, இரவு வண்டியூர் கோயிலை அடைகிறார். மே 13 இரவு மண்டூக மகரிஷி சாப விமோசனம் நடந்து, இரவு தொடங்கி, விடிய விடிய தசாவதார சேவையில் அருள்பாலிப்பார். தொடர்ந்து கருட வாகனம், ராஜாங்க சேவையில் வைகையில் அருள் பாலிக்கும் பெருமாள், மே 16 காலை மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் நகர்வலம் வருகிறார். அன்று மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்து கண்ணாடி சேவை நடக்கிறது. மே 17 உற்சவ சாந்தி, மறுநாள் பால்குடம் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.