பதிவு செய்த நாள்
28
ஏப்
2025
11:04
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகள் மடத்தின் சார்பில், மே 16 – 24 வரை, ஒன்பது நாட்களுக்கு இலவச சைவ சமய பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, திருக்கயிலாய பரம்பரை, மெய்கண்டார் மடம், தொண்டை மண்டல ஆதீனம் 234வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகள் கூறியதாவது: காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், ஞானபிரகாச தேசிய பரமாசார்ய சுவாமிகள் மடத்தின் சேக்கிழார் வளாகத்தில் மே 16 – 24 வரை, முதலாம் ஆண்டு கோடை கால சைவ சித்தாந்த தொடர் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில், சைவ சித்தாந்த நுால்கள் விரிவாக பயிற்றுவிக்கப்படும். பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் அடிப்படை கல்வித்தகுதி பெற்ற, 70 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் என, இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் பயிற்சி, மதிய உணவு இலவசம். வெளி மாவட்டத்தில் இருந்து பயிற்சி வரும் 20 பேருக்கு மட்டும் உறைவிடம் இலவசம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 5 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய, தங்கள் சுய முகவரி எழுதிய 4 x 9 அளவுள்ள உரையுடன், எஸ்.சிவப்பிரகாசம், மேலாளர், தொண்டை மண்டல ஆதீனம், 57 வி.சி.பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம் 631 502, என்ற முகவரிக்கு கடிதம் எழுதி, பயிற்சிக்கான விண்ணப்ப படிவம், விதிமுறையை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நாளை மறுதினத்திற்குள் வந்து சேர வேண்டும். மேலும் விபரங்களுக்கு. 87784 15088 என்ற மொபைல் போன் எண்ணில் மேலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.