பதிவு செய்த நாள்
03
மே
2025
06:05
தஞ்சாவூர், உத்தராகாண்ட் மாநிலம், கிஷ்கிந்தா சமஸ்தானம், ஸ்வர்ணஹம்பியில் உள்ள ஸ்ரீ ஹனுமத் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், ஹிந்துக்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றான கேதார்நாத்தில், கடந்த 2021ம் ஆண்டு, 12 அடி உயர கருங்கல் ஆதிசங்கரர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிறகு, அங்கு நித்யபூஜை மேற்கொள்ள, பஞ்லோகத்தில் செய்யப்பட்ட ஆதிசங்கரர் சிலையை பிரதிஷ்டை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான சிலை வடிவமைக்கும் பணியை, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே திம்மக்குடியில் உள்ள கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் சிற்பக்கூடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, கேதார்நாத், பத்ரிநாத், உத்தரமானிய ஜோதிர்மத், பவிஸ்ய படாரி ஆகிய புனித ஸ்தலங்களில் பிரதிஷ்டை செய்யும் வகையில், ஸ்தபதி வரதராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட சிற்பிகள் குழுவினர் 40 நாட்களில், பஞ்லோகத்தாலான, ஒன்றரை அடி உயரமுள்ள, நான்கு ஆதிசங்கரர் சிலைகளை வடிவமைத்தனர். தலா 37 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட சிலைகள், கடந்த சில மூன்று நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து சிற்பக் கூட தலைமை ஸ்தபதி வரதராஜ் கூறியதாவது: ஆதிசங்கரரின் 2532வது ஜெயந்தி விழா நடைபெறும் வைகாச சுக்லபட்ச பஞ்சமி தினமான நேற்று கேதார்நாத்தில், நாங்கள் வடிவமைத்த பஞ்சலோக உற்சவர் ஆதிசங்கரர் சிலை முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 3 மற்றும் 4ம் தேதி பத்ரிநாத்திலும், 5 ம் தேதி உத்தரமானிய ஜோதிர்மத்திலும், 6ம் தேதி பவிஸ்ய படாரியில் ஆதிசங்கரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.