பதிவு செய்த நாள்
05
மே
2025
11:05
மானாமதுரை; மானாமதுரை அருகே வேம்பத்துார் பூர்ண, புஷ்கலா தேவி சமேத கலிதீர்த்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
சிவகங்கை மாவட்டம், வேம்பத்துாரில் உள்ள பழமையான பூர்ண, புஷ்கலாதேவி சமேத கலிதீர்த்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்திற்காக புனரமைக்கப்பட்டது. மே 3 ம் தேதி காலை 8:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. அன்று மாலை 5:00 மணிக்கு சங்கல்பம், வாஸ்துசாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேச பூஜைகள் நடந்தன. நேற்று (மே 4) அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜைகளுடன் துவங்கின. ஹோமம், பாராயணம், நாடி சந்தனம், பூர்ணாகுதி நடந்தது. பூர்ண கும்பங்களில் புனித நீர் எடுத்து யாகசாலையில் இருந்து கோயிலை வலம் வந்தனர். காலை 8:25 மணிக்கு சிவாச்சாரியார்கள் கோயிலின் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. மகா அபிஷேகம், மந்திரபுஷ்பம், சதுர்வேத பாராயணம், பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. வேம்பத்துார் கிராம மக்கள், திருப்பணி குழுவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.