பதிவு செய்த நாள்
05
மே
2025
12:05
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்திரை உத்திரப் பெருவிழா, 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டிற்கான உத்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.
இதில், காலை 5:30 மணிக்கு கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கச்சபேஸ்வரர் பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். விழாவையொட்டி தினமும், காலை 7:30 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் பல்வேறு வாகனத்தில், சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். அதன்படி இரண்டாம் நாள் உத்சவமான இன்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் சுவாமி உலா வருகிறார். ஐந்தாம் நாள் உத்சவமான வரும் 8ம் தேதி இரவு திருக்கல்யாண உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான வரும் 10ம் தேதி காலை மகா ரதமும், 10ம் நாள் உத்சவமான வரும் 13ம் தேதி வெள்ளி ரதமும், 12ம் நாள் உத்சவமான வரும் 15ம் தேதி பஞ்சமூர்த்திகள் உத்சவமும் நடைபெறுகிறது. வரும் 18ம் தேதி, இரவு ஊஞ்சல் உத்சவத்துடன் சித்திரை உத்திரப் பெருவிழா நிறைவு பெறுகிறது. உத்சவத்தையொட்டி தினமும், மாலை 6:00 மணிக்கு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் அரங்கில், வாரியார் ஆன்மிக தொண்டு மன்றத்தினரின், திருமுறை, சொற்பொழிவு, இசை, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது.