பதிவு செய்த நாள்
05
மே
2025
04:05
மானாமதுரை; மானாமதுரையில் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா இன்று காலை பூஜைகளுடன் துவங்கியது. நூற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர் இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவசமாதி மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் சோமநாதர் சன்னதிக்கு பின்புறம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்தாண்டிற்கான விழா இன்று காலை மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.எஸ்.பி.ஏ., உண்ணாமலை அம்மாள் தனியார் திருமண மஹாலில் துவங்கியதையடுத்து சதாசிவ பிரம்மேந்திராளுக்கு ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் அபிஷேக, ஆராதனைகள், பூக்களை கொண்டு பூஜைகளை செய்தனர். பின்னர் வாய்ப்பாட்டு, மெல்லிசை, மிருதங்கம், வயலின் கச்சேரிகளும், மாலை பாராட்டு விழாவும் நடைபெற்றது.இன்று 6ம் தேதி ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் நடைபெறும் ஆராதனை விழாவில் உஞ்சவ் விருத்தி,குருஅஞ்சலி, கோஷ்டி கானம், விக்னேஸ்வர, வடுக, கன்யா, சுவாசினி, தம்பதி பூஜைகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸத்குரு ஸதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.