பதிவு செய்த நாள்
07
மே
2025
10:05
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ராமநவமி உற்சவ வைபவம் நடைபெற்றது.
காரமடை அரங்கநாதர் கோவிலில் அதிகாலை நடைதிறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் கால சந்தி பூஜை செய்யப்பட்டது. ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள், வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடையுடன், மேளதாளம் முழங்க, நான்கு ரத வீதிகள் வழியாக, வலம் வந்து கோவிலை அடைந்தார். ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர், திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஆகியோர் திவ்ய பிரபந்தத்தில், குலசேகர பெருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி பாசுரங்களை சேவித்தனர். அதைத் தொடர்ந்து உச்சிக்கால பூஜை சற்று முறைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், அறங்காவலர்கள், செயல் அலுவலர், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர். காரமடையில் ஸ்ரீ ஜெய மாருதி சேவா சங்கத்தின் சார்பில், 39ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி உற்சவம் நடந்தது. சொர்க்கவாசல் வீதியில் அமைந்துள்ள ஜெய மாருதி சேவா சங்கத்தினர், ராமநவமி உற்சவத்தை விமர்சையாக நடத்தினர். சீதாராம, லக்ஷ்மண, ஆஞ்சநேயர் விக்ரங்களுக்கு விஷ்வக்க்ஷேனர், ஆராதனம், புன்யா வசனம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமபிரானுக்கும், சீதாப்பிராட்டிக்கும் விவாக சுப முகூர்த்தம் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை உடுமலை ஸ்ரீதர் பாகவதர் குழுவினர் மற்றும் ஸ்ரீ பகவான் நாம பஜனை சபாவை சேர்ந்தவர்கள் நடத்தி வைத்தனர். சாற்றுமுறை மகா தீபாராதனைக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை ராமநவமி உச்சவ கமிட்டியினர், ஜெய மாருதி சேவா சங்கத்தினர் செய்திருந்தனர். இவ்விழாவில் அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.