பகவதி அம்மன் கோவில் யானைகளின் உபசரிப்புடன் திருச்சூர் பூரம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2025 03:05
பாலக்காடு; இரு பகவதி அம்மன் கோவில் யானைகளின் உபசரிப்புடன் 36 மணி நேரம் நீண்டு நின்ற திருச்சூர் பூரம் திருவிழா நிறைவடைந்தது.
கேரள மாநிலத்தில், புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கடந்த மே 5ம் தேதி நெய்தலைக்காவு பகவதி அம்மன் செண்டை மேளம் முழங்க வடக்குநாதர் சன்னிதிக்கு வந்து மூலவரை வணங்கி தெற்கு கோபுரம் நடை வழியாக யானை மீது எழுந்தருளியதோடு ஆரம்பித்தன. தொடர்ந்து பூரம் நாளான நேற்று விழா கொண்டாடும் கணிமங்கலம் சாஸ்தா உட்பட எட்டு உப கோவில்களின் உற்சவர்கள் யானை மீது எழுந்து வடக்குநாதரை வணங்கிச் செல்லும் வைபவம் நடந்தன. தொடர்ந்து பிரஹ்மசுவம் மடத்தில் வரவு பஞ்சவாத்தியம், இலஞ்சித்தறை மேளம், செம்படை மேளம் ஆகிய இசை மழை நடந்தன. திருவம்பாடி மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில்கள் போட்டிபோட்டு அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்புடன் நடத்திய முத்துமணி குடை மாற்றம் நிகழ்ச்சியை பக்திக் கடலில் மோதிய அலைபோல் திரண்டு மக்கள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து உற்சவர்களுக்கு நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின் அதிகாலை பிரம்மாண்டமான வேடிக்கை நடந்தன. தொடர்ந்து திருவம்பாடி மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகளான சந்திரசேகரனும் எர்ணாகுளம் சிவகுமாரும் துதிக்கை உயர்த்தி வடக்குநாதர் கோவிலில் வணங்கி, உபசரித்துச் செல்லும் நிறைவு நிகழ்ச்சி நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு திருச்சூர் பூரம் விழா 2026 ஏப்., 26ம் தேதி நடைபெறும்.