சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2025 01:05
மயிலாடுதுறை; சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவத்தில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான சட்டை நாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரர், சட்டைநாதர், தோனியப்பர், அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக நிகழ்வு திருமுலைப்பால் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் 15 நாள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 1ம் தேதி இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று 8ம் நாள் திருவிழாவாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் விநாயகர், சுவாமி - அம்மன், திருஞானசம்பந்தர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளினார். சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது . தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. கீழவீதியில் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக திருத்தேர் வலம் வந்தது. வழியெங்கும் பக்தர்கள் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.