மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2025 03:05
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவில் சுவாமிகளுக்கு நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துங்கியது.விழா நாட்களின் போது அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று வந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக இன்று அதிகாலை சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் சர்வ அலங்காரங்களுடன் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்த போது ஏராளமானோர் கல்யாணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை மேளதாளங்கள் முழங்க கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து சுவாமிகள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படிக்கு காலை 9:00 மணிக்கு எழுந்தருளினர்.அங்கு சிவாச்சாரியார்கள் ஹோமங்களை வளர்த்து திருக்கல்யாணத்திற்கான பூஜைகளை செய்தனர். சுவாமி சார்பில் சிவாச்சாரியார் அம்பியும்,அம்மன் சார்பில் சிவாச்சாரியார் ராஜேஷ்சும் மாலைகளை மாற்றிக் கொண்ட பின்னர் காலை 9:50 மணிக்கு சோமநாதர் சுவாமியிடம் இருந்து பெற்ற திருமாங்கல்யத்தை ஆனந்தவல்லி அம்மனுக்கு அணிவித்தனர்.அதே நேரத்தில் கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தையும் மாற்றிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.கோயில் வளாகத்திற்குள் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தர்கள் காண்பதற்கு வசதியாக கோயிலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் நேரடி காட்சிகளாக ஒளிபரப்பினர்.திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படிதார்கள், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் உள்பட பலர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களிடமிருந்து திருக்கல்யாண மொய் வசூல் செய்யப்பட்டது. சித்திரை திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை 9:00 மணிக்கு நடைபெற உள்ளது.